தஞ்சாவூர் அருகே பரிதாபம்: தண்டவாளத்தில் சிக்கிய முதியவரை மீட்க முயன்ற ரயில்வே ஊழியர் ரயில் மோதி பலி

தஞ்சாவூர் அருகே ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவரை மீட்க முயன்ற ரயில்வே பணியாளர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த கோர விபத்தில் ரயில்வே கேட் கீப்பர் மற்றும் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ரயில்வே ஊழியர், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எஸ். ராகுல் குமார் (30) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பாபநாசத்தில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, பாபநாசம் மற்றும் சுந்தரபெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே கேட்டில் ராகுல் குமார் புதன்கிழமை இரவு பணிபுரிந்து கொண்டிருந்தார். நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் அந்த வழியாக வருவதற்காக, ரயில்வே கேட்டினை அவர் மூடிவிட்டுப் பாதுகாப்பில் இருந்தார். அந்த சமயத்தில், சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்துள்ளார்.
வேகமாக வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் வருவதைக் கண்ட ராகுல் குமார், உடனடியாக அந்த முதியவரை எச்சரித்து காப்பாற்றுவதற்காக தண்டவாளப் பகுதிக்கு விரைந்து சென்றார். எதிர்பாராத விதமாக, முதியவரை மீட்க முயன்ற சமயத்தில் வேகமாகக் கடந்து சென்ற ரயில், ராகுல் குமார் மற்றும் முதியவர் ஆகிய இருவர் மீதும் பலமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் ரயில்வே காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றினர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது அடையாளம் காணப்படாத முதியவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணியின் போது உயிரைப் பணயம் வைத்து மற்றவரை மீட்க முயன்ற ரயில்வே ஊழியரின் துணிச்சலான செயலும், இந்த விபத்தும் பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









