சேலத்தில் அதிர்ச்சி: சட்டவிரோத பாலின கண்டறியும் கும்பல் மீது சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை

சேலம் மாவட்டம் கோணகராடு கிராமத்தில் சட்டவிரோதமாகக் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் கும்பலை சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாகத் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கோணகராடு கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் செயலில் ஈடுபட்டு வந்த கும்பல் குறித்த ரகசியத் தகவல் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் அவர்களின் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக, இரண்டு பெண்களைக் கர்ப்பிணிகளாக வேடமிட்டு அனுப்பிய அதிகாரிகள், அந்த கும்பலை கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டனர்.
இந்த ஆபரேஷனின் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்பவரிடம் தலா 23,000 ரூபாய் பணத்தை அந்தப் பெண்கள் வழங்கினர். அதன்பிறகு, சேலம் மாவட்டம் கோணகராடு பகுதியில் உள்ள எச். மேதா பிரதீப் தாஸ் என்பவருக்குச் சொந்தமான வீட்டிற்கு அந்த அதிகாரிகள் சென்றனர். அங்கு தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு கர்ப்பிணிகள் ஸ்கேன் பரிசோதனைக்காகக் காத்திருந்த நிலையில், பாலினத்தைக் கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. எனினும், சுகாதாரத்துறை அதிகாரிகள் நெருங்குவதை உணர்ந்த குற்றவாளிகள் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், சட்டவிரோதப் பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்ட கையடக்க ஸ்கேன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனர். ஆரம்பக்கட்ட விசாரணையில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நான்கு கர்ப்பிணிப் பெண்கள் இவர்களிடம் ஸ்கேன் செய்துகொள்ள வந்தது தெரியவந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் 8,000 ரூபாய் முதல் 23,000 ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சட்டவிரோதச் செயலில் இடைத்தரகர்களாகச் செயல்பட்ட சேலத்தைச் சேர்ந்த எம். கனகவல்லி மற்றும் திருப்பத்தூரைச் சேர்ந்த ஜி. சுகுமார் ஆகியோர் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் எஸ்.பி. நந்தினி மற்றும் சேலம் மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் எஸ். சௌந்தம்மாள் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்னர், இது தொடர்பாக தொளசம்பட்டி காவல் நிலையத்தில் முறையான புகாரைப் பதிவு செய்தனர். இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் பாலினத்தைக் கண்டறிவது மற்றும் கருக்கலைப்புக்குத் தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.









