சர்வே ஜன சுகினோ பவந்து: கதாநாயகனாக மனோரஞ்சன், வில்லனாக பிருத்வி அம்பார் - நடிகை அபர்ணா தாஸின் கன்னட அறிமுகம்

மனோரஞ்சன் ரவிச்சந்திரன் மற்றும் பிருத்வி அம்பார் இணைந்து நடிக்கும் 'சர்வே ஜன சுகினோ பவந்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
கன்னடத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'சர்வே ஜன சுகினோ பவந்து'. இந்தத் திரைப்படத்தில் நடிகர் மனோரஞ்சன் ரவிச்சந்திரன் மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரமான பிருத்வி அம்பார் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் சுனில் ருத்ரபிரபா இப்படத்தை இயக்கியுள்ளார். எஸ்.வி. நாராயணன் மற்றும் எஸ்.வி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் எஸ்.வி. என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். கிராமத்துக் கதைக் களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகையான அபர்ணா தாஸ், கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார். தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' மற்றும் கவினின் 'டாடா' போன்ற தமிழ் படங்களில் தனது சிறந்த நடிப்பால் கவனம் ஈர்த்தவர் அபர்ணா என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மனோரஞ்சன் ரவிச்சந்திரன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், பிருத்வி அம்பார் வழக்கத்திற்கு மாறான வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
எஸ்.வி. என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பான இப்படம், தொழில்நுட்பக் குழுவில் முன்னணி கலைஞர்களைக் கொண்டுள்ளது. பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைக்க, கார்த்திக் எஸ் ஒளிப்பதிவு செய்ய, கே.எம். பிரகாஷ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் ரங்காயண ரகு, சிட்லிங்கு ஸ்ரீதர், தீக்ஷித் கௌடா, மனமோகன் ராய் மற்றும் தஷவர் சந்துரு உள்ளிட்ட திறமையான நட்சத்திரக் கூட்டணி இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, மந்தியா, மைசூரு, மேல்கோட்டை, தொட்டபள்ளாபூர், கதக், பெலகாவி, ஹுப்பள்ளி மற்றும் தார்வாட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் 55 நாட்கள் நடைபெற்று தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் வெளியீடு மற்றும் பிற முக்கிய தகவல்களைத் தயாரிப்பு தரப்பு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









