உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சொந்த மண்ணில் சாதிக்கத் துடிக்கும் சத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி

17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடருக்காக சத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி தயாராகி வருகின்றனர்.
இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்களான சத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் நடைபெறவுள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடருக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 17 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடர், தங்களின் விளையாட்டு ஆர்வத்தை எவ்வாறு தூண்டியது என்பதை இருவரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். அந்தத் தொடரின் போது சத்விக்சாய்ராஜின் தந்தை ஒரு தொழில்நுட்ப அதிகாரியாகவும், அவரது சகோதரர் தன்னார்வலராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சீன வீரர் ஒருவரின் ராக்கெட்டை சத்விக்சாய்ராஜ் பரிசாகப் பெற்றதும், அதைக்கொண்டு அவர் தனது ஆரம்பக்கட்ட மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடியதும் அவரது வாழ்வின் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
சிராக் ஷெட்டியைப் பொறுத்தவரை, அக்காலகட்டத்தில் நேரடியாகப் போட்டிகளைக் காண முடியாவிட்டாலும், தனது அகாடமி நண்பர்கள் மூலம் லின் டான், லீ சோங் வீ, தாவ்பிக் ஹிடாயத் போன்ற ஜாம்பவான்களின் ஆட்டத்தைப் பற்றிய கதைகளைக் கேட்டு வளர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். அந்தத் தொடரின் பரபரப்பான ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் தனது மனதில் நீங்காத இடம்பிடித்ததாக அவர் நினைவு கூர்ந்தார். தற்போது அந்தப் பெருமைமிக்க தொடர் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பியுள்ள நிலையில், சொந்த நாட்டு ரசிகர்களின் ஆதரவோடு புதிய வரலாற்றைப் படைக்க இந்த இணை தயாராகி வருகிறது.
சமீபத்திய காயங்கள் மற்றும் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் களமிறங்குவது சவாலானதாக இருந்தாலும், அதை நேர்மறையான அணுகுமுறையுடன் எதிர்கொள்வதாக இந்த ஜோடி தெரிவித்துள்ளது. காயங்களிலிருந்து மீள்வதற்குத் தகுந்த ஓய்வு மற்றும் முறையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்று கூறிய சிராக் ஷெட்டி, அவசரப்பட்டு போட்டிகளில் பங்கேற்று மீண்டும் காயம் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கவே இந்த இடைவெளி எடுக்கப்பட்டதாகத் தெளிவுபடுத்தினார். சத்விக்சாய்ராஜ் தனது உடல் தகுதியை 90 முதல் 95 சதவீதம் வரை மீட்டெடுத்துள்ளதாகவும், மனரீதியாகப் போட்டிகளுக்குத் தயாராக இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் அழுத்தம் தருமா என்ற கேள்விக்கு, அது ஒரு ஊக்கமே என்று சத்விக்சாய்ராஜ் பதிலளித்தார். தங்கள் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் விளையாடுவதை எப்போதும் விரும்புவதாகவும், இந்தியா ஓபன் தொடரைப் போல இதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். போட்டியில் தங்களின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்த கேள்விகளுக்கு, மற்ற வீரர்களை விடத் தாங்கள் தங்களுக்குள்ளேயே போட்டியிட்டு, தங்களை மேம்படுத்திக்கொள்வதில்தான் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டனர். நுணுக்கமான ஆட்டங்கள் மற்றும் சர்வீஸ் பெறுவதில் கூடுதல் கவனம் செலுத்தி, உலக சாம்பியன்ஷிப் மேடையில் மீண்டும் ஒருமுறை இந்தியாவிற்காகப் பதக்கம் வெல்லும் முனைப்புடன் அவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.









