இந்திய ஹாக்கியின் எழுச்சிக்கு பின்னால் உள்ள ரகசியம்: பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் அக்பர் கருத்து

இந்திய ஹாக்கி துறையின் வளர்ச்சிக்கு அதன் வலுவான உள்நாட்டு கட்டமைப்புதான் காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் அக்பர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஹாக்கி அரங்கில் இந்திய அணி தொடர்ந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருவதற்கு, அந்நாட்டின் வலுவான உள்நாட்டு ஹாக்கி கட்டமைப்புதான் அடிப்படை காரணம் என்று பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் அக்பர் பாராட்டியுள்ளார். கடந்த காலங்களில் ஹாக்கி விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த பாகிஸ்தான், தற்போது சரிவைச் சந்தித்துள்ள நிலையில், இந்தியா தனது கட்டமைப்பைச் சீரமைப்பதில் காட்டிய தீவிரமே அதன் தற்போதைய வெற்றிக்கு வித்திட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கோல்கீப்பரான சல்மான் அக்பர், ஒரு நேர்காணலில் பேசுகையில், 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறத் தவறியது இந்திய ஹாக்கி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று சுட்டிக்காட்டினார். அந்தத் தோல்விக்குப் பிறகு, இந்தியா தனது அடிமட்டத்திலிருந்தே விளையாட்டை வலுப்படுத்தவும், உள்நாட்டுப் போட்டிகளை முறையாகத் திட்டமிடவும் நடவடிக்கை எடுத்தது. அதன் பலனாகவே இன்று டோக்கியோ மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கங்களையும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும் இந்தியா வென்றுள்ளது.
உள்நாட்டு ஹாக்கி லீக் போட்டிகள் மற்றும் ஆண்டு முழுவதும் நடக்கும் தொடர்ச்சியான போட்டிகளே சிறந்த வீரர்களை உருவாக்க உதவுகின்றன என்று சல்மான் அக்பர் விளக்குகிறார். பாகிஸ்தானில் இதுபோன்ற வலுவான உள்நாட்டு அமைப்பு இல்லாததே அந்நாட்டு அணி சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து சொதப்புவதற்குக் காரணமாக உள்ளது. தகுதியான புதிய வீரர்களைக் கண்டறியவும், அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கவும் தேவையான கட்டமைப்பு பாகிஸ்தானில் இல்லை என்பது கவலையளிக்கும் விஷயம் என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷின் ஓய்வு குறித்தும் அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். ஸ்ரீஜேஷுடன் இணைந்து பயிற்சி பெற்ற இளம் கோல்கீப்பர்களான மோஹித் மற்றும் சூரஜ் கார்க்கெரா ஆகியோர், அவரைப் போன்ற ஒரு ஜாம்பவானின் அனுபவத்திலிருந்து நிறைய கற்றிருப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கூறிய சல்மான், 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தவில்லை என்றாலும், வரவிருக்கும் போட்டிகளில் அந்த வெற்றி வறட்சியைத் தகர்க்க பாகிஸ்தான் முயற்சிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.









