செம்மஞ்சேரி விளையாட்டு நகரத் திட்டம் ரத்து: ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில் பிரம்மாண்டமாக மறுவடிவமைப்பு

சென்னை செம்மஞ்சேரியில் அமையவிருந்த ரூ. 205.89 கோடி மதிப்பிலான சர்வதேச விளையாட்டு நகரத் திட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
சென்னை செம்மஞ்சேரியில் அமையவிருந்த சர்வதேச விளையாட்டு நகரத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் 205.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தத் திட்டத்திற்காக, ஆர்.பி.பி. இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணி ஆணையை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) தற்போது ரத்து செய்துள்ளது. இந்த முடிவு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் மறுசீரமைப்பு குறித்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஜெ. மேகநாத ரெட்டி அனுப்பிய கடிதத்தில், தற்போதுள்ள நிலத்தின் முழுப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை இன்னும் விரிவான மற்றும் பிரம்மாண்டமான முறையில் மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பெரும் விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும் திறனுடன், நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு நகரத்தை உருவாக்குவதே இந்த மறுசீரமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த பிப்ரவரி 18, 2026 அன்று அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இந்த விளையாட்டு நகரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கால்பந்து மைதானம், துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி தளம், வில்வித்தை அரங்கம், படகோட்டுதல் தளம், சைக்கிளிங் மற்றும் ஸ்கேட்டிங் அரங்குகள் எனப் பல்வேறு சர்வதேச தரத்திலான வசதிகளுடன் இந்தத் திட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், செம்மஞ்சேரி பகுதி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், அது வெள்ள அபாயத்திற்கு உட்பட்ட பகுதி எனச் சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்து வந்தனர். வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) ஆய்வு செய்து வந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த திட்டமும் மறுவடிவமைப்புக்கு உட்படுத்தப்படுகிறது.
திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஆர்.பி.பி. இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் தேசிய பங்குச் சந்தைக்குத் தகவல் தெரிவித்துள்ளது. நிறுவனம் ஏற்கனவே கட்டுமானப் பணிகளைத் தொடங்கி கணிசமான செலவுகளைச் செய்துள்ள நிலையில், அரசின் இந்த திடீர் முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே, குஜராத்தில் உள்ள வீர் சவர்கார் விளையாட்டு வளாகம் போன்ற சர்வதேச தரத்திலான கட்டமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகச் சென்னையில் புதிய மற்றும் பொருத்தமான இடத்தை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் அளவிற்கு உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற அரசு முனைப்பு காட்டி வருகிறது.









