சிவகங்கையில் தேவாலய கட்டுமானத்திற்கு அனுமதி: உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

சிவகங்கையில் தேவாலய கட்டுமானத்தை நிறுத்தக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையில் இந்து கோவில் அருகே தேவாலயத்தை மீண்டும் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு மத வழிபாட்டுத் தலத்தின் கட்டுமானப் பணிகளைத் தடுக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள இந்த தேவாலயத்தை புனரமைக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கடந்த 2021-ம் ஆண்டு மே 13-ம் தேதி அனுமதி அளித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து இந்து முன்னணியைச் சேர்ந்த ஜி. மாரிமுத்து என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரர் தனது வாதத்தில், தேவாலயம் கோவில் வளாகத்திற்கு 45 மீட்டர் தொலைவில் இருப்பதாகவும், ஆட்சியர் அனுமதி அளிக்கும் முன்பு அப்பகுதி மக்களிடம் கருத்துகளைக் கேட்டிருக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இருப்பினும், தேவாலயத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த இடத்தில் கடந்த 25 ஆண்டுகளாகவே பிரார்த்தனை கூடம் இயங்கி வருவதாகவும், அப்பகுதி மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். பழைய கட்டிடம் வலுவிழந்த காரணத்தினால் மட்டுமே தற்போது மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தார். வருவாய் கோட்டாட்சியர் (RDO) நடத்திய கள ஆய்வின் அடிப்படையில், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி பெறப்பட்ட அறிக்கையின் மூலமே ஆட்சியர் கட்டுமானப் பணிக்கு அனுமதி அளித்ததாக அவர் தெரிவித்தார். அந்த அறிக்கையில், தேவாலயம் நீண்ட காலத்திற்கு முன்பே அங்கு இருப்பதை உறுதி செய்துள்ள மக்கள், கட்டுமானப் பணிக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், மனுதாரர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அல்ல என்பதையும் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் என். திலீப் குமார் அடங்கிய அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் அமைதியாக இணைந்து வாழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டனர். வெறும் ஆதாரமற்ற சந்தேகங்களைக் காரணம் காட்டி, இந்த மதநல்லிணக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஆட்சியரின் உத்தரவில் தலையிட மறுத்த நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை முடித்து வைத்தது. இந்தத் தீர்ப்பு மத சுதந்திரம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.









