போலி காப்பீட்டு மோசடிகளைத் தடுக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வு குழு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் போலி காப்பீட்டு கோரிக்கைகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் போலி காப்பீட்டு கோரிக்கைகள் மற்றும் முறைகேடுகளைக் களைவதற்காக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வு குழுக்களை (SIT) அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளார். போலி விபத்துகள், போலியான மருத்துவ ஆவணங்கள் மற்றும் கற்பனையான காயங்கள் மூலம் காப்பீட்டுத் தொகையை மோசடி செய்யும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு வழிவகுக்கும்.
நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி, போலி காப்பீட்டு கோரிக்கைகள் தொடர்பாக புகார் அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த மோசடிகளில் தனிநபர்கள், வாகன பழுதுபார்க்கும் நிலையங்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என ஒரு பெரிய கூட்டணிக் கும்பல் செயல்பட்டு வருவதாக நீதிமன்றம் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சங்கிலியை உடைக்க மாநில உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு புலனாய்வு குழுக்களின் செயல்பாடுகள் குறித்து நீதிபதி விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். மாநகரப் பகுதிகளில் உதவி ஆணையர் தலைமையிலும், மாவட்டங்களில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையிலும் இந்தக் குழுக்கள் செயல்பட வேண்டும். மேலும், இந்த புலனாய்வுக் குழுக்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் மாநில சிபி-சிஐடி பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் கண்காணிப்பார். இந்தக் குழுக்களுக்குத் தேவையான நிர்வாக மற்றும் நிதி ஒத்துழைப்பை வழங்குமாறு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இந்த மோசடிகளுக்கு உடந்தையாக இருக்கும் அல்லது தடுத்த நிறுத்தத் தவறும் அரசு அதிகாரிகள் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. போலி காப்பீட்டு பாலிசிகள், பொய்யான காயங்கள் மற்றும் போலியான மருத்துவக் கட்டண ரசீதுகள் மூலம் பொதுமக்களின் பணத்தைச் சுரண்டும் இதுபோன்ற மோசடிச் செயல்களை வேரறுக்க இந்த சிறப்பு குழுக்கள் மிக முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









