சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர்: 14 ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனி திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சிலை கடத்தல் வழக்கில் சிறை தண்டனை முடிந்து நீண்ட நாட்களாக சிறையில் இருந்த சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த கலைப்பொருள் வியாபாரி சுபாஷ் சந்திர கபூர், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தனது சொந்த நாடான ஜெர்மனிக்குத் திரும்புவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 19 சிலைகள் கடத்தல் வழக்கில், சுமார் 94 கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்காலச் சிலைகளைத் திருடியதாக இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் விசாரணையிலும், சிறையிலும் இருந்த இவருக்கு தற்போது நீதிமன்றம் நிம்மதி அளிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா மற்றும் என். குணசேகரன் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சுபாஷ் சந்திர கபூர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த முடிவை எட்டியுள்ளது. கபூர் ஏற்கனவே தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை நிறைவு செய்துவிட்டதாகவும், இருப்பினும் பிற நிலுவை வழக்குகளுக்காக அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் மனுவில் வாதிடப்பட்டிருந்தது.
சுபாஷ் சந்திர கபூர் 2011-ம் ஆண்டு ஜெர்மனியில் ரெட் கார்னர் நோட்டீஸ் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, 2012-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. விசாரணைக் கைதியாக அவர் சிறையில் இருந்த காலத்தைக் கழித்து கணக்கிட்டால், பிப்ரவரி 2023-லேயே அவர் விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு இடையிலான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின் 19-வது பிரிவின்படி, ஒரு நபர் எந்த நோக்கத்திற்காக நாடுகடத்தப்பட்டாரோ, அந்த வழக்கை மட்டுமே அவர் சந்திக்க வேண்டும் என்றும், அதற்கு முந்தைய பிற வழக்குகளுக்காக அவரைத் தடுத்து வைக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசு கபூர் மீதுள்ள மற்ற 10 வழக்குகளுக்காக அவரது நாடுகடத்தல் காலத்தை நீட்டிக்க ஜெர்மனி அரசிடம் அனுமதி கோரியிருந்தது. எனினும், நான்கு வழக்குகளுக்கு ஜெர்மனி அரசு மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், மற்ற வழக்குகள் பரிசீலனையில் உள்ளதாக நீதிமன்றம் அவதானித்தது. சட்ட விதிமுறைகளின்படி, அவர் ஜெர்மனி திரும்புவதற்குத் தடையில்லை என்று நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.









