மின் நுகர்வு திடீர் உயர்வு: மின் கட்டணம் வசூலிக்கும் முன் அதிரடி சரிபார்ப்பு - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

மின் பயன்பாடு 20 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தால், மின் கட்டண ரசீது தயார் செய்வதற்கு முன்பு நேரில் சரிபார்க்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுமக்களின் மின் கட்டணச் சுமையைக் குறைக்கும் வகையிலும், மின் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக வருவதாகப் பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, இந்த புதிய சரிபார்ப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கணக்குப்பிரிவு வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, இனிவரும் காலங்களில் மின் பயன்பாடு திடீரென அதிகரிக்கும் பட்சத்தில், உடனடியாகக் கட்டண ரசீது வழங்கப்பட மாட்டாது.
இந்த புதிய நடைமுறையானது, ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2026 மாதங்களில் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்திய வீட்டு மின் இணைப்புகளைக் கொண்ட நுகர்வோருக்கு முதற்கட்டமாகப் பொருந்தும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான மின் கணக்கீட்டில், முந்தைய சுழற்சியை விட 20 சதவீதத்திற்கும் அதிகமான மின் பயன்பாடு பதிவாகியிருந்தால், தானியங்கி முறையில் கட்டண ரசீது உருவாக்கப்படுவது தற்காலிகமாகத் தடை செய்யப்படும். இத்தகைய நுகர்வோரின் மின் பயன்பாட்டை, மின் வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பின்னரே கட்டண ரசீது வெளியிடப்படும்.
உதாரணமாக, ஒரு நுகர்வோர் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் 600 யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த பயன்பாடு 720 யூனிட்டுகளைக் கடக்கும்பட்சத்தில், உடனடியாகக் கட்டணத்தை வசூலிக்காமல் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு மூன்று வேலை நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை மின் கணக்கீட்டில் தவறுகள் கண்டறியப்பட்டால், உடனடியாகவோ அல்லது அடுத்த வேலை நாளுக்குள்ளாகவோ அந்தத் தவறு சரிசெய்யப்பட வேண்டும் என்று மின் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த ஆய்வுப் பணிகளில் அலட்சியமாகச் செயல்படும் அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் அல்லது கேபிள் மூலமாகத் தானியங்கி முறையில் மின் அளவீடு செய்யப்படும் இணைப்புகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தாது. கள ஆய்வுக்குப் பிறகும் நுகர்வோருக்குத் திருப்தி இல்லையெனில், மின் மீட்டரில் உள்ள தரவுகளைப் பதிவிறக்கம் செய்து, மின் வாரியத்தின் எம்.ஆர்.டி (MRT) பிரிவின் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். அதேசமயம், நுகர்வோர் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய காலக்கெடு தொடர்பான விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.









