தமிழகத்தில் கட்டிட அனுமதி விண்ணப்பங்கள்: இனி ஒற்றைச் சாளர முறையில் பதிவு செய்யலாம் - புதிய இணையதளம் அறிமுகம்

தமிழகத்தில் கட்டிட அனுமதி நடைமுறைகளை எளிதாக்க கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் பொறியாளர்களுக்கான ஒருங்கிணைந்த இணையதளம் அறிமுகம்.
தமிழகத்தில் கட்டிட அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையிலும், கட்டிடக்கலை மற்றும் பொறியியல் துறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கிலும், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் கட்டிடக்கலை நிபுணர்கள், பொறியாளர்கள் மற்றும் நகரத் திட்டமிடுபவர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்வதற்கு ஏதுவாக, ஒற்றைச் சாளர இணையதள முறை (Single Window Portal) உருவாக்கப்படவுள்ளது. தற்போதுள்ள நடைமுறையில், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அதிகாரிகளிடம் தனித்தனியாகப் பதிவு பெற வேண்டிய கட்டாயம் இருப்பதால், பணிகள் முடிவடைவதில் காலதாமதம் மற்றும் குழப்பங்கள் ஏற்படுவதை அரசு உணர்ந்துள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்கவே இந்த புதிய டிஜிட்டல் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நகர மற்றும் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) மூலம் செயல்படுத்தப்படவுள்ள இந்த இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு, மாநிலம் தழுவிய அளவில் செல்லத்தக்க தனித்துவமான பதிவு அடையாள எண் (Unique Registration ID) வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி, தமிழகத்தில் உள்ள எந்தவொரு உள்ளாட்சி அமைப்பு அல்லது திட்டமிடல் ஆணையத்தின் வரம்பிற்குள்ளும் இவர்கள் கட்டிட அனுமதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் கட்டிட விதிகள் 2019-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே இந்த புதிய நடைமுறையின் கீழ் பதிவு செய்ய முடியும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பதிவு செய்வதற்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளத்தின் மூலமாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும், மேலும் அதற்கான ஒப்புதல்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள நகர மற்றும் ஊரமைப்பு இயக்கக அலுவலகங்கள் வழங்கும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள பதிவு பெற்ற நிபுணர்களின் விவரங்கள் படிப்படியாக புதிய முறைக்கு மாற்றப்படும் என்றும், அவர்களின் தற்போதைய பதிவு காலம் முடிவடையும் வரை அவை செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, பதிவை புதுப்பிப்பதையும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், பதிவு பெற்ற பொறியாளர்களுக்குக் குறிப்பிட்ட பரப்பளவு கொண்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் வழங்கப்படவுள்ளது. இதன்படி, 8,070 சதுர அடி வரை உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், 3,230 சதுர அடி வரையிலான வணிக வளாகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பேட்டைகளில் 26,900 சதுர அடி வரை உள்ள தொழிற்சாலை கட்டிடங்களுக்கு இவர்களே திட்ட ஒப்புதல் மற்றும் அனுமதி வழங்கும் வகையில் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை கட்டுமானத் துறையில் நிலவும் தேவையற்ற நடைமுறைச் சிக்கல்களை நீக்கி, விரைவான மற்றும் தடையற்ற சேவையை உறுதி செய்யும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.









