செம்மஞ்சேரி சர்வதேச விளையாட்டு நகரம்: ரூ. 205 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு

சென்னை செம்மஞ்சேரியில் அமையவிருந்த சர்வதேச விளையாட்டு நகருக்கான ரூ. 205.89 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
சென்னை ஓஎம்ஆர் சாலை பகுதியில் உள்ள செம்மஞ்சேரியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த பிரம்மாண்டமான சர்வதேச விளையாட்டு நகரத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த 205.89 கோடி ரூபாய் மதிப்பிலான பணி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆர்.பி.பி. இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் தேசிய பங்குச் சந்தைக்கு அளித்த தகவலில் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த விளையாட்டு நகரத்திற்கான அடிக்கல்லை கடந்த 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தை ரத்து செய்ததற்கான காரணத்தை விளக்கியுள்ள அதிகாரிகள், தற்போதுள்ள திட்டத்தை விட மிகப்பாரிய அளவில் இதனை மறுவடிவமைப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற சர்வதேச அளவிலான பிரம்மாண்டமான போட்டிகளை நடத்தும் திறனைப் பெறும் வகையில், விளையாட்டு நகரத்தை மிகவும் விரிவான மற்றும் முழுமையான வசதிகளுடன் உருவாக்க நிலப்பரப்பை முழுமையாகப் பயன்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஒப்பந்த நிறுவனத்திற்கு முறைப்படியான தகவல் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 80 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த இந்த விளையாட்டு நகரத்தில் சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம், பல்வேறு தூரங்களுக்கான துப்பாக்கிச் சுடும் தளங்கள், வில்வித்தை மைதானம் மற்றும் படகு சவாரி போன்ற நீர்வழி விளையாட்டுக்களுக்கான உள்கட்டமைப்புகள் இடம்பெறவிருந்தன. மேலும், பிஎம்எக்ஸ் சைக்கிள் ஓட்டும் தளம், ஸ்கேட்டிங் மைதானம், பல்நோக்கு உள்விளையாட்டு அரங்குகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான தங்குமிடங்கள் என அனைத்து வசதிகளுடன் இந்த வளாகம் அமைக்கப்படவிருந்தது. செம்மஞ்சேரி பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய சூழலில் இருப்பதால், அங்கு முறையான மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஏற்கனவே அப்பணிக்காக தாங்கள் மேற்கொண்ட செலவுகள் மற்றும் நிதி இழப்புகள் குறித்து ஆர்.பி.பி. இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் தற்போது ஆய்வு செய்து வருகிறது. ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின்படி, தங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும், அரசுடன் மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும் நிறுவனம் ஆலோசித்து வருகிறது. தற்போதுள்ள அரசு, மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களை மறுஆய்வு செய்து வரும் நிலையில், இந்த விளையாட்டு நகரத் திட்டமும் அந்த வரிசையில் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும், இந்த மறுவடிவமைக்கப்பட்ட திட்டத்திற்கான புதிய காலக்கெடு அல்லது நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை.









