கோதாவரி-காவேரி-குண்டாறு நதிநீர் இணைப்பு: பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல்

கோதாவரி-காவேரி-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கி, நீண்டகால நீராதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், கோதாவரி-காவேரி-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து அதை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள விரிவான கடிதத்தில், தமிழகத்தின் நீராதாரங்கள் மற்றும் நீர்ப்பாசனத் தேவைகளின் அவசியம் குறித்து அவர் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் இயற்கையிலேயே மேற்பரப்பு நீர் ஆதாரங்கள் குறைவாகக் கொண்ட மாநிலமாகும். மாநிலத்தின் மொத்த தண்ணீர் தேவையில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமான அளவை அண்டை மாநிலங்களையே தமிழகம் நம்பி இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது என்று முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மாநில அரசு நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்துத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால், நீர் ஆதாரங்களைப் பெருக்குவது தற்போதைய அவசியத் தேவையாக உள்ளது.
குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்கள் தொடர்ந்து வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளாகவும், தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளாகவும் இருப்பதை முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கோதாவரி-காவேரி-வைகை-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், உபரி நீர் கிடைக்கும் பகுதிகளில் இருந்து தண்ணீர் பற்றாக்குறை உள்ள வறட்சி மாவட்டங்களுக்கு நீரைப் பகிர்ந்தளிக்க முடியும். இதுவே அப்பகுதிகளின் நீர் தேவையைத் தீர்ப்பதற்கான மிக நீடித்த மற்றும் நிரந்தரமான தீர்வாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் விரிவான திட்ட அறிக்கையில், கோதாவரி-பெண்ணாறு-பாலாறு-வெள்ளாறு இணைப்புத் திட்டம் காவேரி ஆற்றிற்குச் சற்று முன்பாகவே முடிவடைவது போலத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளை கதவணை வரை நீட்டிப்பது அவசியம் என்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் தேசிய நீர் மேம்பாட்டு முகமை ஆகியவற்றின் மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் உரிய ஆலோசனைகளை நடத்தி, திட்டத்தை விரைந்து இறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.









