தமிழக வனத்துறைக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு: வன பாதுகாப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்கள் அறிவிப்பு

தமிழக வனத்துறையை வலுப்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு மற்றும் பல்வேறு நவீன பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக வனத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், வனப்பகுதிகளை பாதுகாக்கவும் சுமார் 100.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான மறுசீரமைப்புத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2026-27 முதல் 2030-31 வரையிலான காலக்கட்டத்தில் இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வனப்படை வலுப்படுத்தப்பட உள்ளது. வனப் பாதுகாப்பு, வனவிலங்கு மேலாண்மை மற்றும் மனித-வனவிலங்கு மோதல்களைத் தடுப்பது போன்ற சவால்களை எதிர்கொள்வதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும் என்று வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார்.
வனத்தீயினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், தற்காலிகத் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக 60.58 கோடி ரூபாய் செலவில் நிரந்தரமான மற்றும் கட்டமைக்கப்பட்ட வனத்தீ மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது வனத்தீயைக் கட்டுப்படுத்துவதில் களப்பணியாளர்களின் தயார்நிலை மற்றும் விரைவான செயல்பாட்டை மேம்படுத்த உதவும். காட்டுத்தீ பரவுவதை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகளும் இதில் அடங்கும்.
நகர்ப்புற மற்றும் சமூக அடிப்படையிலான இயற்கை வளப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் தலா ஒரு ஹெக்டர் பரப்பளவில் 25 புதிய இயற்கை பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரிய வகை மற்றும் அழிந்து வரும் வன உயிரினங்களை அடையாளம் கண்டு பாதுகாக்கும் வகையில், மாவட்ட பல்லுயிர் அடையாளங்களை (District Biodiversity Symbols) அறிவிக்கவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் உள்ள மாநில வன ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல்படும் மர தடயவியல் மற்றும் மரக்கட்டை பகுப்பாய்வு மையம் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களை நவீனமயமாக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைகள், கடற்கரை மாவட்டங்கள் மற்றும் இதர வனப்பகுதிகளில் பல்லுயிர் ஆய்வுகளை மேற்கொள்ள 43 இயற்கை ஆர்வலர்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக 4.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தமிழகத்தின் வன வளத்தைப் பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









