தமிழ்நாடு வனத்துறை புதிய அதிரடி: மாவட்ட வன அலுவலர்கள் இனி மாதத்தில் 15 நாட்கள் களப்பணியில் இருக்க வேண்டும்

வனப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் மாவட்ட வன அலுவலர்கள் மாதத்திற்கு 15 நாட்கள் களப்பணியில் ஈடுபட தமிழ்நாடு வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் காடுகளைப் பாதுகாப்பதையும், வனப் பகுதிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு, வனத்துறை உயர் அதிகாரிகள் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளனர். இதன்படி, அனைத்து மாவட்ட வன அலுவலர்களும் (DFOs) இனி மாதத்திற்கு குறைந்தது 15 நாட்கள் கண்டிப்பாகக் களப்பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனப் படைகளின் தலைவர் மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஏ. உதயன் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நிர்வாகப் பணிகளுக்காக அலுவலகங்களிலேயே முடங்கிக் கிடக்கும் போக்கு மாறி, வன அதிகாரிகள் நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
இந்த உத்தரவின்படி, மாவட்ட மற்றும் கோட்ட வன அலுவலர்கள் மாதத்தில் குறைந்தது ஏழு முதல் எட்டு இரவுகளை வனப் பகுதிகளில் உள்ள வன உயிரின வேட்டைத் தடுப்பு முகாம்கள், வன ஓய்வு விடுதிகள் அல்லது பொருத்தமான இடங்களில் தங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதிகள், பிளாண்டேஷன் எனப்படும் வனப்பயிரிடும் இடங்கள் மற்றும் உணர்திறன் மிக்க பகுதிகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். சமீபகாலமாக வனப் பகுதிகளில் மரம் வெட்டுதல், காட்டுத்தீ சம்பவங்கள் மற்றும் யானைகளின் தந்தங்கள் மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் தோல்கள் வேட்டையாடப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ள சூழலில், இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நீலகிரி வனக்கோட்டத்தில் உள்ள குந்தா காப்புக்காட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கும் விதமாக, களப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பழங்குடியின மக்கள் மற்றும் அடிமட்ட வன ஊழியர்களுடன் கலந்துரையாடி, வனப்பகுதி தொடர்பான தகவல்களைத் துல்லியமாகச் சேகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கள வருகை, வனச்சரக அலுவலர்கள் மற்றும் வன ஊழியர்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், அவர்களுக்கு ஊக்கமளிக்கவும் உதவும் என்று வனத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
அதேவேளையில், களப்பணி குறித்து அதிகாரிகள் சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளனர். சென்னையில் உள்ள உயர் அதிகாரிகள், களப்பணிகள் தொடர்பான கோப்புகளுக்கு விரைவாக ஒப்புதல் அளிப்பதும், திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை உடனுக்குடன் வழங்குவதும் அவசியம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அலுவலகப் பணிகளுக்காகக் களப்பணியைத் தவிர்க்காமல், இணையவழி கூட்டங்களை வனப்பகுதிகளில் இருந்தபடியே மேற்கொள்ளலாம் என்றும், அலுவலகங்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் தலைமை வனப் பாதுகாவலர் ஏ. உதயன் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த புதிய விதிமுறைகளைச் செயல்படுத்துவதை அந்தந்த வனக்கோட்டத்தின் தலைமை வனப் பாதுகாவலர்கள் மற்றும் புலிகள் காப்பகங்களின் கள இயக்குநர்கள் கண்காணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









