தமிழக அரசு அதிரடி நடவடிக்கை: வங்கி விடுமுறை நாளிலும் ஓய்வூதியம் பெற்ற 19 லட்சம் பயனாளிகள்

தமிழகத்தில் 19.71 லட்சம் பேருக்கு ஓய்வூதியத் தொகை வங்கி விடுமுறை நாட்களையும் கடந்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு எவ்விதத் தடையுமின்றி தொகையை வழங்க மாநில அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. செப்டம்பர் 11 முதல் 14 வரை தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் இருந்தபோதிலும், சுமார் 19.71 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஓய்வூதியத் தொகையை வரவு வைக்கும் பணியை வருவாய் நிர்வாக ஆணையரகம் வெற்றிகரமாக முடித்துள்ளது. மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மூன்று பிரிவுகளின் கீழ் வரும் பயனாளிகளுக்கு இந்த ஓய்வூதிய உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணப்பரிமாற்றத்திற்காக மாநில அரசு சார்பில் 185.95 கோடி ரூபாயும், மத்திய அரசு பங்களிப்பாக 52.81 கோடி ரூபாயும் என மொத்தம் 238.76 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. எஸ்.என்.எஸ்-ஸ்பர்ஷ் (SNS-SPARSH) புதிய கட்டண முறைக்கு மாறியுள்ள சூழலில், இந்தத் தொகையை பயனாளிகளுக்குச் சென்றடையச் செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதனைச் சரிசெய்ய மாநில அரசு, மத்திய ஊரக வளர்ச்சித் அமைச்சகம் மற்றும் டெல்லியில் உள்ள ஊதியம் மற்றும் கணக்குகள் அலுவலகத்துடன் இணைந்து துரிதமாகச் செயல்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஒத்துழைப்புடன், கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரகம் நிதியை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தது. இறுதிக்கட்டமாக, தேசிய பணப்பரிமாற்றக் கழகம் (NPCI) திங்கள்கிழமை அன்று சிறப்புப் பணப் பரிவர்த்தனை விண்டோவை வழங்கியதன் மூலம் இந்த ஓய்வூதியத் தொகை பயனாளிகளுக்குச் சென்றடைந்தது. மத்திய அரசின் நிதி பங்கீடு விடுமுறைக்கு முன்னதாகக் கிடைக்காததால் ஏற்பட்ட தாமதம், மாநில அரசின் இந்த ஒருங்கிணைந்த முயற்சியால் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மொத்தம் 12 பிரிவுகளின் கீழ் சுமார் 35.37 லட்சம் பயனாளிகள் சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களைப் பெற்று வருகின்றனர். இதில், மத்திய அரசின் பங்களிப்புத் தொகை குறிப்பிட்ட காலத்திற்குள் வராததால், சுமார் 19.71 லட்சம் பேருக்கு வெள்ளிக்கிழமை வரை ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் நீடித்தது. இருப்பினும், அரசு மேற்கொண்ட சிறப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் காரணமாக, வங்கி விடுமுறை நாளாக இருந்தும் பயனாளிகளுக்குத் தொகை சென்றடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மாநில அரசின் நிர்வாகத் திறனுக்கு ஒரு முக்கியச் சான்றாகப் பார்க்கப்படுகிறது.









