தமிழ்நாடு மனநல மருத்துவமனைகளுக்கு புதிய விதிகள்: கட்டாயப் பதிவு மற்றும் நோயாளி உரிமைகளைப் பாதுகாக்க அரசு அதிரடி

தமிழ்நாட்டில் மனநலக் காப்பகங்களுக்கான புதிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது, இதன் மூலம் கட்டாயப் பதிவு மற்றும் தரமான சிகிச்சைகள் உறுதி செய்யப்படுகின்றன.
தமிழக அரசு மனநல சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள் மற்றும் காப்பகங்களுக்கான புதிய விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, மாநிலத்தில் செயல்படும் அனைத்து மனநல சிகிச்சை நிறுவனங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாக்கும் நோக்கில், உள்கட்டமைப்பு வசதிகள், வழங்கப்படும் சேவைகள் மற்றும் பணியாளர்களின் தகுதி உள்ளிட்டவற்றில் குறைந்தபட்ச தரநிலைகளை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த விதிமுறைகள் அரசு மற்றும் தனியார் மனநல மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மனநலப் பிரிவுகள், பன்நோக்கு மருத்துவமனைகளில் உள்ள மனநல வார்டுகள், போதை மறுவாழ்வு மையங்கள் மற்றும் உளவியல் மறுவாழ்வு மையங்களுக்குப் பொருந்தும்.
புதிய விதிகளின்படி, ஒவ்வொரு படுக்கைக்கும் குறைந்தது ஆறு சதுர மீட்டர் இடவசதி இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு எனத் தனித்தனி வார்டுகள் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாலின ரீதியான வார்டுகளில் வசிக்க விரும்பாதவர்களுக்காக பாலின நடுநிலை வார்டுகளையும் (Gender-neutral ward) மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும். நோயாளிகளுக்குத் தேவையான சுகாதாரமான குடிநீர், போதுமான காற்றோட்டம் மற்றும் முறையான வெளிச்ச வசதிகளை உறுதிப்படுத்துவது நிர்வாகத்தின் பொறுப்பாகும். நோயாளிகளைக் கட்டுப்படுத்த உடல் ரீதியான தடைகளைப் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்; தவிர்க்க முடியாத சூழலில் மனநல மருத்துவரின் அனுமதி பெற்றே அவ்வாறு செய்ய வேண்டும். மேலும், அத்தகைய நடவடிக்கைக்குப் பிறகு 24 மணி நேரத்திற்குள் நோயாளியின் குடும்பத்தினருக்கோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிக்கோ தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நாள்தோறும் மனநல நிபுணர்கள் பரிசோதனை செய்வது உறுதி செய்யப்பட வேண்டும். நோயாளிகளுக்குத் தரமான மற்றும் சத்தான உணவை அளவுக்கட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். சிகிச்சை நேரத்தில் நோயாளிகள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுடன், ஏதேனும் குறைகள் இருந்தால் அதனைத் தெரிவிக்க முறையான தீர்வு வழிமுறைகளும் இருக்க வேண்டும். நோயாளிகளின் மருத்துவ ஆவணங்கள் குறைந்தது 10 ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டும். பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அந்தப் பதிவுகளை மூன்று மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. போதை மறுவாழ்வு மையங்கள், தீவிர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர்களை அனுமதிக்கக்கூடாது என்றும், அத்தகைய நபர்களை உரிய மருத்துவ மையங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுயமாக வாழ முடியும் ஆனால் சிறு ஆதரவு தேவைப்படும் நபர்களுக்காக, தங்குமிட வசதிகளையும் அரசு அங்கீகரித்துள்ளது. இத்தகைய மையங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் வாரத்திற்கு ஒருமுறை சமூகப் பணியாளர் வந்து ஆய்வு செய்ய வேண்டும். ஒரு தங்குமிடத்தில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கக் கூடாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை தவிர, மற்ற அனைத்து மனநல நிறுவனங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். மாநில மனநல ஆணையம், மனநல நிபுணர்களின் மின்னணுப் பதிவேட்டைப் பராமரிப்பதோடு, மாவட்ட வாரியான பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வரைவு விதிகள் மீதான கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டு, மனநலச் சட்டம் 2017-ன் பிரிவு 123-ன் கீழ் இறுதி விதிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.









