திருநெல்வேலி: சிறைக் கைதியின் பிறந்தநாளை ஆயுதங்களுடன் கொண்டாடிய கும்பல் அதிரடி கைது

திருநெல்வேலி அருகே சிறையில் உள்ள ரவுடியின் பிறந்தநாளை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொண்டாடிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏ பிளஸ் ரக ரவுடி நவீன் என்பவரின் பிறந்தநாளை ஆயுதங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எட்டு நபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேரன்மகாதேவி - கூனியூர் சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடியில் சனிக்கிழமை இரவு சுமார் 8.50 மணியளவில் ரவுடி நவீனின் ஆதரவாளர்கள் ஒன்று கூடியுள்ளனர். அங்கு கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்த அந்தக் கும்பலிடம் கத்தி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்கள் இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, ரோந்துப் பணியில் இருந்த காவல் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். காவல்துறையைக் கண்டதும் அங்கிருந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும், காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு எட்டு பேரை மடக்கிப் பிடித்தனர். கைதானவர்களில் பாலமுருகன், பாஸ்கர், உள்ளி பிச்சையா, வேல் கணேஷ், மகேஷ் கண்ணன், சுப்பையா என்ற சூர்யா, முப்பிடாதி மற்றும் பேச்சிகுட்டி என்ற ராம் ஆகியோர் அடங்குவர். இவர்களில் ஐந்து பேர் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வரலாற்றுப் பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்தில் இருந்து குற்றவாளிகள் பயன்படுத்திய 12 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், காவல்துறை வருவதைக் கண்டு தப்பி ஓடிய மற்ற நபர்களை அடையாளம் காணும் பணிகளும், அவர்களைக் கைது செய்யும் தீவிர முயற்சியும் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள நவீன், பல்வேறு மாவட்டங்களில் தொடர் கொலை வழக்குகள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, கடந்த 2024 ஆம் ஆண்டு தீபக் ராஜா என்ற நபர் கொல்லப்பட்ட வழக்கில் நவீன் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார். இந்த சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் சமூகப் பதற்றத்தை உருவாக்கியதைத் தொடர்ந்து, அவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தின் போதும், சமூக வலைதளங்களிலும் இவரது பெயரையும், புகைப்படங்களையும் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தனர். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.









