திருநங்கை அனயா பங்கருக்கு கிரிக்கெட் விளையாட அனுமதி: மரிசான் காப் கடும் எதிர்ப்பு

திருநங்கை அனயா பங்கர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளதற்கு மரிசான் காப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகளான அனயா பங்கர், கடந்த மார்ச் மாதம் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (CA) வகுத்துள்ள திருநங்கைகள் மற்றும் பாலின பன்முகத்தன்மை கொண்ட வீரர்கள் பங்கேற்பு கொள்கையின் கீழ், அனயா பங்கர் மீண்டும் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விளையாட்டு வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவை எதிர்த்து தென்னாப்பிரிக்க அணியின் ஆல்-ரவுண்டர் மரிசான் காப் தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் ஏற்புடையது அல்ல என்றும், இத்தகைய முடிவுகள் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு, மகளிர் கிரிக்கெட் போட்டிகளின் போட்டித்தன்மை மற்றும் நேர்மையை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கொள்கைப்படி, ஒரு வீரர் மகளிர் பிரிவில் பங்கேற்க வேண்டுமானால், அவர்களின் இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவு கடந்த 12 மாதங்களாக 10 nmol/L-க்கும் குறைவாக இருக்க வேண்டும். அனயா பங்கர் இதற்கான மருத்துவத் தகுதிகளைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், 2027 மார்ச் வரை அவர் சமூக அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும். அதன்பிறகு, நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையின் முடிவுகளைப் பொறுத்தே அவர் உயர்மட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார்.
தனது மீள்வருகை குறித்து கருத்து தெரிவித்த அனயா பங்கர், இது ஒரு முறையான கட்டமைப்பின் மூலமே சாத்தியமானது என்று விளக்கம் அளித்துள்ளார். தான் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தனது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு பெண்மைக்கான மருத்துவ வரம்பிற்குள் இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு என்பது அணியில் நேரடியாக இடம் கிடைப்பது அல்ல என்றும், பயிற்சிகள் மூலம் திறமையை நிரூபித்து அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். விளையாட்டு உலகில் இத்தகைய விவகாரங்கள் குறித்த உரையாடல்கள், ஆதாரங்களின் அடிப்படையில் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.









