விளையாட்டு வீரர்களின் தேர்விலும் பயிற்சியிலும் வெளிப்படைத்தன்மை அவசியம்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிரடி

தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் கூட்டத்தில் வீரர்களின் தேர்வினை கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் (NSF) மாநாட்டில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று உரையாற்றினார். இந்த முக்கிய கூட்டத்தில் 2025-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் கீழ் சம்மேளனங்களின் செயல்பாடுகள், நல்ல நிர்வாக நடைமுறைகள் மற்றும் வரவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகள், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் 2030 காமன்வெல்த் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. விளையாட்டுத்துறை இணை அமைச்சர் ரக்ஷா கட்கே மற்றும் விளையாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விளையாட்டு வீரர்களுக்கு எந்த நிலையிலும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, வீரர்களைத் தேர்வு செய்யும் செயல்முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அனைத்துத் தேர்வுப் போட்டிகளையும் கேமரா மூலம் பதிவு செய்து, பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். தேர்வுகளில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது என்பது அரசின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
இந்திய விளையாட்டுத் துறையில் ஊக்கமருந்து பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார். வீரர்களைக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், ஊக்கமருந்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அதற்குத் துணை நிற்பவர்கள் என ஒட்டுமொத்த சங்கிலியையும் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். இதற்காக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
வெளிநாட்டுப் பயிற்சியாளர்களைச் சார்ந்திருப்பதை விட, உள்நாட்டுப் பயிற்சியாளர்களை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இந்தியப் பயிற்சியாளர்களுக்குச் சிறந்த சர்வதேச வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேசிய விளையாட்டு சம்மேளனங்களுடன் இணைந்து, விளையாட்டு நிர்வாகத்தின் தரத்தை உயர்த்துவதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதன்மை இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.









