திருச்சியில் காவிரி ஆற்றில் சுற்றுலாத் திட்டம்: ஆலோசனைகளைத் தயார் செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருச்சியில் காவரி ஆற்றங்கரையை சுற்றுலாத் தலமாக மாற்றும் வகையில் விரிவான திட்ட அறிக்கைகளைத் தயார் செய்ய மாவட்ட நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசு தனது சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் காவிரி, வைகை மற்றும் தாமிரபரணி ஆறுகளில் சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்த ரூ. 53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் காவிரி ஆற்றைப் பயன்படுத்தி சுற்றுலாத் தளங்களை மேம்படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயால், சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் சமீபத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் என்னென்ன வசதிகளைச் செய்ய முடியும் என்பது குறித்து ஆலோசகர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஹோகேனக்கல் முதல் ஸ்ரீரங்கம் வரையிலான காவிரி நதிக்கரையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பேசப்பட்டாலும், முதற்கட்டமாகச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் இதர அம்சங்களை உருவாக்கக்கூடிய இடங்களைத் தேர்வு செய்து, அங்கு மட்டும் பணிகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயால் இது குறித்துக் கூறுகையில், சுற்றுலாத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்துவதற்காக ஆலோசகர்கள் மூலம் சில குறிப்பிட்ட திட்ட முன்மொழிவுகளை (project proposals) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான அடுத்தகட்ட ஆலோசனைகள் மற்றும் விரிவான திட்டமிடல் நடைபெறும். திட்டங்கள் இறுதி செய்யப்பட்டவுடன், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான செயல்பாடுகள் அங்கு முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காவிரி, வைகை மற்றும் தாமிரபரணி ஆகிய நதிகளில் படகு சவாரி, நதிக்கரைகளில் சூழல் நடைபாதைகள், கலாச்சார மற்றும் பாரம்பரிய சுற்றுலாப் பயணங்கள், சாகச விளையாட்டுகள் மற்றும் நதி நீர் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. குறிப்பாக, மதுரையில் வைகை நதிக்கரையிலும், பாபநாசம் முதல் திருநெல்வேலி வரையிலான தாமிரபரணி நதிக்கரையிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நதிசார் சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தையும், சுற்றுலாத்துறையையும் மேம்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.









