ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்து: டிவிகே எம்எல்ஏ-வை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்

ஜல்லிக்கட்டு குறித்து டிவிகே எம்எல்ஏ கருப்பையா தெரிவித்த கருத்துக்கு டிடிவி தினகரன் மற்றும் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழர் பாரம்பரியத்தின் அடையாளமாகவும், விவசாயிகளின் வீர விளையாட்டாகவும் போற்றப்படும் ஜல்லிக்கட்டு குறித்து டிவிகே எம்எல்ஏ எம்.வி. கருப்பையா தெரிவித்த கருத்துகள் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு இளைஞர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக அவர் சட்டமன்றத்தில் முன்வைத்த கருத்து, பெரும் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், உலகம் முழுவதும் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெறும் சோழவந்தான் தொகுதியின் பிரதிநிதியே இத்தகைய கருத்தைக் கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழர்களின் கலாச்சாரத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த இந்த கருத்து, கண்டிக்கத்தக்கது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூர் முதல் மெரினா வரை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டங்களை நினைவு கூர்ந்த தினகரன், இது போன்ற கருத்துகள் தமிழக மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாகக் கூறினார்.
இந்த சர்ச்சைக்குரிய கருத்து சட்டமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள டிடிவி தினகரன், இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார். எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிடுகிறதா என்பதையும் டிவிகே தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட எம்எல்ஏ தனது கருத்தைத் திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சபாநாயகர் அந்த சர்ச்சைக்குரிய வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்த விவகாரத்தில் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். எம்எல்ஏவின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டு குறித்த இத்தகைய கருத்துகள், அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, பொதுமக்களிடையேயும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் டிவிகே தலைமை என்ன மாதிரியான விளக்கத்தை அளிக்கப் போகிறது என்பதே தற்போது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.









