கற்றல் வேறுபாடு கொண்ட குழந்தைகளின் மனவோட்டம்: கோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தந்தை

கோவையில் தந்தை ஒருவர் தனது மகள் வரைந்த ஓவியங்கள் மூலம் கற்றல் வேறுபாடுகள் கொண்ட குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கண்காட்சி நடத்தினார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜேஷ் பாலகிருஷ்ணன் என்பவர், தனது 17 வயது மகள் தனிஷா கிருஷ்ணன் ராஜேஷ் வரைந்த ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டு, 'டிரா அஸ் டுகெதர்' (DRAW US 2GETHER) என்ற தலைப்பில் ஒரு பிரத்யேகக் கலைக் கண்காட்சியை நடத்தினார். இந்த கண்காட்சி கடந்த ஆகஸ்ட் 19 முதல் 23-ம் தேதி வரை கோவையில் உள்ள ஒரு கலைக்கூடத்தில் நடைபெற்றது. குழந்தைகளின் கற்றல் வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையான அன்பையும் ஆதரவையும் வழங்குவதன் முக்கியத்துவத்தை பெற்றோர் மற்றும் சமூகத்திற்கு உணர்த்துவதே இந்தக் கண்காட்சியின் முதன்மை நோக்கமாகும்.
ராஜேஷின் மகள் தனிஷா, அமெரிக்காவில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். சுமார் 20 நாட்களுக்கு முன்பு, அவர் வரைந்த ஒரு குடும்ப ஓவியம் ராஜேஷை நிலைகுலைய வைத்தது. அந்த ஓவியத்தில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க, தனிஷா மட்டும் பயத்துடனும், மூச்சு விடுவதற்கு சிரமப்படுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தார். தாங்கள் மிகுந்த அன்புடன் குழந்தையை வளர்ப்பதாகக் கருதிய பெற்றோருக்கு, இந்த ஓவியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாங்கள் நல்லெண்ணத்துடன் செய்யும் பல விஷயங்கள், மகளின் பார்வையில் வேறு விதமான அழுத்தங்களை உருவாக்குகின்றன என்பதை அந்த ஓவியம் வெளிப்படுத்தியது.
தனிஷா தனது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, கற்றல் வேறுபாடுகள் காரணமாக அரசு விதிமுறைகளின்படி கூடுதல் கால அவகாசம் பெற்று தேர்வு எழுதினார். இருப்பினும், சக நண்பர்கள் அவளை கேலி செய்ததும், கூடுதல் நேரம் எடுப்பதை ஒரு குறைபாடாகச் சித்தரித்து வருங்காலத்தில் இது திருமணத்திற்குத் தடையாக இருக்கும் என்று தவறான கருத்துகளைப் பகிர்ந்ததும் அந்தச் சிறுமியைப் பெரிதும் பாதித்துள்ளது. புரிதல் இல்லாத சமூகத்தின் இத்தகைய அணுகுமுறையே, அவரை உயர் கல்விக்காக அமெரிக்காவிற்கு அனுப்பும் முடிவுக்குத் தள்ளியதாக தந்தை ராஜேஷ் குறிப்பிட்டார்.
இந்தக் கண்காட்சியின் வாயிலாக, கற்றல் வேறுபாடுகள் கொண்ட குழந்தைகளைச் சமூகத்தின் அங்கமாக ஏற்றுக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களையும் பெற்றோருக்கு அவர் விநியோகித்தார். கூடுதல் கால அவகாசம் மற்றும் கணக்கீட்டு கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற அரசின் சலுகைகள், அக்குழந்தைகளின் திறமையை வளர்க்கும் வாய்ப்புகளே தவிர, அவை குறைபாடுகள் அல்ல என்பதை இந்த நிகழ்வு அழுத்தமாகப் பதிவு செய்தது. குழந்தைகளின் உணர்வுகளை மதிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த ஓவியங்கள் ஒரு பாலமாக அமைந்தன என்று தனிஷா தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.









