வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா: சிறப்பம்சங்கள் என்ன?

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு, வாரந்தோறும் வண்ணத்துப்பூச்சிகளை விடுவிக்கும் நிகழ்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா தற்போது முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 2.7 ஹெக்டேர் பரப்பளவில் ஓட்டேரி ஏரியின் அருகில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சிக்குத் தேவையான அனைத்து சூழல்களையும் உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு இயற்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் பூங்கா நிர்வாகம் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த பூங்காவின் மிக முக்கியமான சிறப்பம்சமாக கருதப்படும் உள்வளாக வண்ணத்துப்பூச்சி காப்பகம், கம்பளிப்பூச்சியின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கம் மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பிரத்யேகமான தாவரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி, அவற்றின் நடத்தை மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலான விளக்க மையம் மற்றும் லார்வா மற்றும் கூட்டுப்புழு வளர்ப்பு அறைகளும் இங்கு முறையாகப் பராமரிக்கப்படுகின்றன.
புதுப்பித்தல் பணிகளின் ஒரு பகுதியாக, காப்பகத்தின் உட்புறத்தில் பல வண்ணத்திலான பாலிகார்பனேட் தாள்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை வெவ்வேறு வண்ண ஒளி நிலைகளை உருவாக்கி, பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பழைய இரும்புக் கம்பிகளுக்குப் பதிலாக நீண்ட காலம் உழைக்கக்கூடிய மூங்கில் தடுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு மற்றும் தெளிவான பார்வை வசதிக்காக பூங்காவின் வலைச் சுவர்கள் துருப்பிடிக்காத எஃகு (Stainless-steel) வலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்கில், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11.30 மணிக்கு வண்ணத்துப்பூச்சிகளை இயற்கையில் விடுவிக்கும் சிறப்பு நிகழ்வு நடத்தப்பட உள்ளது. வண்ணத்துப்பூச்சிகளின் இருப்பைப் பொறுத்து இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்தத் தனித்துவமான அனுபவத்தில் பங்கேற்று, புதுப்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்காவின் அழகை ரசிக்கலாம் என பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









