அரிய வகை 'லார் கிப்பன்' குரங்கு வளர்ப்பு: நடிகர் விக்ரம் வீடியோவால் கிளம்பிய சர்ச்சை - வனத்துறை விசாரணை தீவிரம்

நடிகர் விக்ரம் வீடியோவில் இடம்பெற்ற கிப்பன் குரங்கு விவகாரத்தில், தமிழக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விக்ரம், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர் 'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரிய வகை குரங்குடன் விளையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வகை விலங்குகள் சர்வதேச அளவில் அழியும் நிலையில் உள்ளதால், அவற்றைப் பராமரிப்பதில் கடுமையான விதிகள் பின்பற்றப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து, அந்த விலங்கு எப்படி சென்னைக்கு வந்தது என்பது குறித்து தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணையில், இந்த வீடியோ சென்னையின் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் விக்ரமின் உறவினர் ஒருவரது வீட்டில் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தலைமை வனவிலங்கு காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா, இந்த அரிய வகை விலங்கு உரிய சட்ட அனுமதிகளுடன் கொண்டு வரப்பட்டதா மற்றும் வளர்ப்புக்கான அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். லார் கிப்பன் இனத்தைச் சேர்ந்த குரங்குகள் சர்வதேச வர்த்தக உடன்படிக்கையின்படி (CITES) மிக முக்கியமான பாதுகாப்பு பட்டியலில் உள்ளன. இவற்றை இறக்குமதி செய்ய மத்திய வர்த்தக இயக்குநரகத்தின் ஆவணங்களும், அந்தந்த மாநிலத்தின் தலைமை வனவிலங்கு காப்பாளரின் சிறப்பு அனுமதியும் கட்டாயம் தேவை.
இந்த வழக்கில் ஆவணங்கள் சுட்டிக்காட்டும் பாதை ஈரோடு மற்றும் மணிப்பூர் மாநிலங்களை நோக்கி நீள்கிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு மணிப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர், மலேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகக் கூறி எட்டு லார் கிப்பன்களைப் பதிவு செய்துள்ளார். அதன்பின், அதில் சில குரங்குகள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கிருந்து ஆகஸ்ட் 2026-இல் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு வளர்ப்பு பிராணியாக விற்கப்பட்டதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த இடமாற்றங்கள் இதுவரை முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் வல்லுநர்கள் இந்த விவகாரத்தில் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, வீடியோவில் உள்ள குரங்கு இரண்டு முதல் மூன்று வயதுடையதாக இருப்பதால், 2020-இல் பதிவு செய்யப்பட்ட விலங்குகளில் இது ஒன்றாக இருக்க முடியாது என்று கருதப்படுகிறது. மணிப்பூர்-மியான்மர் வழித்தடங்கள் சட்டவிரோத வனவிலங்கு கடத்தலுக்குப் பெயர் பெற்றவை என்பதால், இந்தத் பரிவர்த்தனை சட்டவிரோதமானது என்று கூறப்படுகிறது. வனத்துறை தரப்பில், வெறும் பதிவு செய்வது மட்டும் சட்டப்பூர்வமான உரிமையை வழங்கிவிடாது என்றும், சர்வதேச வர்த்தக விதிகள் மீறப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.









