வறுமையின் பிடியைத் தகர்த்தெறிந்த திட்லி மாஜி: ஆசிய பளுதூக்குதல் போட்டியில் பதக்கம் வென்று அசத்தல்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய இளையோர் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை திட்லி மாஜி சாதனை படைத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள டெல்பூரைச் சேர்ந்த இளம் பளுதூக்குதல் வீராங்கனை திட்லி மாஜி, உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். தனது வாழ்நாளில் முதல்முறையாக சர்வதேச மேடையில் தடம் பதித்த திட்லி, 45 கிலோ எடைப் பிரிவில் ஸ்நாட்ச் முறையில் 65 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 80 கிலோவும் என மொத்தம் 145 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார். இதன் மூலம் அவர் அந்தந்தப் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியக் கொடியை சர்வதேச அளவில் உயரப் பறக்க வைத்துள்ளார்.
திட்லியின் இந்த வெற்றிக்குப் பின்னால் சொல்லொண்ணாத் துயரங்களும், வறுமையின் நிழலும் மறைந்திருக்கின்றன. அவர் குழந்தையாக இருந்தபோது, தந்தை பொருளாதார நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொண்டார். வேலையில்லாமல் இருந்த தாய் அல்பனா, மதிய உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு குடும்பத்தை வழிநடத்தினார். ஆரம்பத்தில் திட்லியின் பளுதூக்குதல் ஆர்வத்திற்குத் தாய் எதிர்ப்பு தெரிவித்தாலும், மகளின் விடாமுயற்சியைக் கண்டு பின்னர் ஆதரவளித்தார். உள்ளூர் பயிற்சியாளர்களான ஸ்ரீகாந்தா மோடி மற்றும் ப்ரலய்பாக் ஆகியோரின் உதவியே திட்லியின் வளர்ச்சிக்கு முக்கியத் தூணாக அமைந்தது. திட்லியின் குடும்ப சூழலை அறிந்த பயிற்சியாளர்கள், அவருக்குத் தேவையான சத்தான உணவுகளைத் தாங்களே சொந்தச் செலவில் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
பயிற்சியின் ஆரம்ப காலங்களில் திட்லி கடுமையான முதுகுத் தண்டுவடம் தொடர்பான வலியால் அவதிப்பட்டு, சுமார் ஓராண்டு காலம் பளுதூக்கும் பயிற்சியை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். அந்தச் சவாலான காலகட்டத்தைக் கடந்து, மீண்டும் பயிற்சியில் இணைந்து தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். பள்ளி அளவிலான தேசியப் போட்டியில் தங்கம் வென்ற பிறகு, பாட்டியாலாவில் உள்ள தேசிய முகாமிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 'கேலோ இந்தியா' உதவித்தொகை மூலம் தனது குடும்பத்திற்கும் பொருளாதார ரீதியாக உதவி செய்து வரும் திட்லி, தனது தங்கையும் பளுதூக்குதலில் ஈடுபடத் தூண்டுதலாக இருந்து வருகிறார்.
திட்லியின் அபாரமான வளர்ச்சி குறித்து பயிற்சியாளர் ஸ்ரீகாந்தா மோடி குறிப்பிடுகையில், கடின உழைப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனதிடம் ஆகியவைதான் திட்லியின் பலம் என்று கூறியுள்ளார். சர்வதேச அளவில் தனது முதல் பதக்கத்தை வென்ற உற்சாகத்தில் இருக்கும் திட்லி, அடுத்து வரும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பதக்கம் வெல்வதை இலக்காகக் கொண்டு தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். திட்லியின் இந்த வெற்றி, வறுமை மற்றும் தடைகளைக் கடந்து கனவுகளை நனவாக்க விரும்பும் பல இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.









