ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வில் புகோவ்ஸ்கி: பள்ளிக்கூட நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்தது ஏன்?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வில் புகோவ்ஸ்கி, பள்ளியில் ஏற்பட்ட மூளை அதிர்ச்சி விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான வில் புகோவ்ஸ்கி, தனது முன்னாள் பள்ளிக்கூடமான பிரைட்டன் கிராமர் பள்ளி மீது விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமான மனுவைத் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய கால்பந்து பயிற்சியின் போது, பள்ளி நிர்வாகம் உரிய மருத்துவ விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதால் தனது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அப்போது 16 வயதாக இருந்த புகோவ்ஸ்கி, தீவிரமான பயிற்சி ஆட்டத்தின் போது சக வீரரின் முழங்காலில் அடிபட்டு மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.
புகோவ்ஸ்கியின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ள மனுவின் அடிப்படையில், சம்பவம் நடந்த போது அவருக்குப் போதிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்பது முதன்மைக் குற்றச்சாட்டாக உள்ளது. மயக்கமடைந்த நிலையிலும் அவர் மீண்டும் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், இது குறித்து உடனடியாக அவரது பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்காட்ச் கல்லூரியுடனான போட்டித் தோல்விக்குப்பின், வீரர்கள் மிகவும் கடுமையாக விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் அறிவுறுத்தியதே இந்த விபத்திற்கு அடிப்படை காரணமாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்திற்குப் பிறகு புகோவ்ஸ்கி கடுமையான தலைவலி, பார்வை மங்கல் மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். இறுதியில் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் அவருக்குக் கடுமையான மூளைக் காயம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இந்த ஆரம்பகால காயம், அவரது பிற்கால விளையாட்டு வாழ்க்கையில் அவர் தொடர்ந்து மூளை அதிர்ச்சிகளுக்கு (concussions) உள்ளாவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. தனது தொழில்முறை கிரிக்கெட் பயணத்தில் மொத்தம் 13 முறை இதுபோன்ற அதிர்ச்சிகளுக்கு ஆளான அவர், மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில் தனது 27-வது வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த இளம் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்பட்ட புகோவ்ஸ்கி, 2021-ஆம் ஆண்டு சிட்னியில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் இன்னிங்சிலேயே 62 ரன்களைக் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 2,350 ரன்களை 45.19 சராசரியுடன் எடுத்துள்ள புகோவ்ஸ்கி, ஏழு சதங்களை விளாசியுள்ளார். பள்ளி காலத்தில் நிகழ்ந்த கவனக்குறைவான செயல், ஒரு திறமையான வீரரின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ள சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.









