சென்னை சேப்பாக்கத்தில் மகளிருக்கான பிரத்யேக டி20 போட்டி: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மகளிருக்கான சிறப்பு டி20 போட்டி நடைபெறுகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) மகளிரின் கிரிக்கெட் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதன்படி, வரும் ஆகஸ்ட் 25, 2026 அன்று சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மகளிருக்கான பிரத்யேக டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஆட்டமானது 2027-ஆம் ஆண்டில் தொடங்கப்படவுள்ள மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான ஒரு முன்னோடி நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்த சிறப்புப் போட்டியில் தமிழ்நாடு மாநில மூத்தோர் மகளிர் அணி, 23 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு விளையாட உள்ளனர். இந்த அணிகள் டி.என்.சி.ஏ தலைவரின் லெவன் (TNCA President's XI) மற்றும் டி.என்.சி.ஏ செயலாளரின் லெவன் (TNCA Secretary's XI) என்ற பெயரில் களமிறங்குகின்றன. அன்றைய தினம் மாலை 6 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்தப் போட்டி, தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் குவாலிபயர் 2 ஆட்டத்திற்கு முன்னதாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் யூ. பகவந்தோஸ் ராவ் கூறுகையில், இந்த முயற்சி தமிழகத்தில் மகளிர் கிரிக்கெட் சூழலை மேம்படுத்துவதையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்று தெரிவித்தார். மாநிலத்தின் திறமையான வீராங்கனைகளை ஒன்றிணைத்து, அவர்களுக்கு முதன்மையான மைதானத்தில் விளையாடும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்களின் திறமையை வெளிப்படுத்தச் சிறந்த களம் அமைத்துக் கொடுக்கப்படும். மேலும், பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில், இந்தப் போட்டியில் நடுவர்கள் மற்றும் செயல்பாட்டுப் பணிகளில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்று சங்கம் அறிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சங்கம், மக்கள் பெருமளவில் திரண்டு வந்து வீராங்கனைகளை உற்சாகப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் மகளிர் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என டி.என்.சி.ஏ நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.









